பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி- வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது

பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும்.
பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி- வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது
Published on

சென்னை:

பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்களை முறையாக பள்ளிக்கு அழைத்து சென்று வருவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-

பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும். அதேபோல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது பெற்றோர்களிடத்தில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும்.

சாலையை கடந்து செல்பவர்களை தாங்களே கொண்டு சென்று விட வேண்டும். 12 வயதிற்குள் மேல் இருக்கும் மாணவர்கள் 5 பேரும், 12 வயதிற்கு 3 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும்.

ஏற்றப்படும் அனைத்து குழந்தைகளும் ஆட்டோவிற்குள் இருக்க வேண்டும். கம்பியில் அமர வைத்துக் கொண்டோ. புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு வெளியில் தொங்கவிட்டுக் கொண்டோ, செல்லக் கூடாது. கட்டாயமாக ஓட்டுனர் அருகில் யாரையும் உட்கார வைக்க கூடாது. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கு ஓட்டுநர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை செலுத்த வேண்டும். எப்.சி. செய்யாதவர்கள் உடனடியாக செய்ய வேண்டும். கட்டாயம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன் பேசினார்.

நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனநர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com