

மேலூர்:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகில் உள்ள பண்டங்குடியில் உபமின் நிலையம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக பணி புரிவர் தங்க முனியாண்டி (வயது 39).
இங்கு கொட்டாம்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற விவசாயி மனைவி பெயரில் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக கொட்டாம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்திருந்தார்.
அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக உதவி செயற்பொறியாளர் முனியாண்டி விவசாயியிடம் ரூ. 5 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை விவசாயி கோபாலகிருஷ்ணன் இன்று காலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முனியாண்டியிடம் கொடுத்தார். அதை செயற் பொறியாளர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சத்திய சீலன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர்.
மேலும் அவரிடம் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கொட்டாம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.