டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வட மாநில வாலிபர்

வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.
டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வட மாநில வாலிபர்
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com