மதுரை வில்லாபுரத்தில் 6 மாத பெண் குழந்தை மர்ம மரணம்: உடல் தோண்டி எடுப்பு

குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர்.வீட்டில் இருந்த குழந்தை திடீரென இறந்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மதுரை வில்லாபுரத்தில் 6 மாத பெண் குழந்தை மர்ம மரணம்: உடல் தோண்டி எடுப்பு
Published on

மதுரை:

மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன், தொழிலாளி. இவருக்கு கார்த்திகைஜோதி என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த குழந்தை திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டின் அருகில் காலி இடத்தில் குழி தோண்டி புதைத்ததாக தெரிகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் வந்து காளீஸ்வரன்-கார்த்திகை ஜோதியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் குழந்தை இறந்ததால் புதைத்ததாக தெரிவித்தனர். ஆனாலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி, வருவாய் அதிகாரிகள் பிருந்தா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்புதான் முழுமையான தகவல் தெரியவரும். குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது நோய் பாதிப்பு காரணமாக இறந்ததா? என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் 6 மாத பெண் குழந்தைக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல மருத்து வமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்த குழந்தை திடீரென இறந்து விட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com