

மதுராந்தகம்:
தமிழகம் முழுவதும் கடந்த 12, 13ந் தேதிகளில் நீர்நிலைகளில் வசிக்கின்ற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதேபோல் மதுராந்தகம் ஏரி, வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரி, குளம் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கின்ற பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் வேடந்தாங்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 75 வகையான 40 ஆயிரம் பறவைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. தற்பொழுது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் அனைத்து வகையான பறவை இனங்களும் வந்துள்ளன.
தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பறவைகளை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தற்பொழுது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறைந்து காணப்படுவதால் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து வருவதால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து வனச்சரக அலுவலர் லெஸ்லி கூறும்போது, வேடந்தாங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகளில் 2 நாட்கள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 75 வகையான 40 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
வேடந்தாங்கலில் சீசன் இந்த முறை ஜூன் முதம் வரை இருக்கும் என்று எதிர்பாக்கிறோம் என்றார்.