கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 26 பெண் தொழிலாளர்கள் காயம்

26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.
கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 26 பெண் தொழிலாளர்கள் காயம்
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com