தொலை தூரத்தில் தேர்வு பணி ஒதுக்கீடு- அரசு பள்ளி ஆசிரியர்கள் 200 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் 200க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர். பின்னர் அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்
Published on

சேலம்:

தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வுகள் இந்த மாதம் தொடங்குகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 5ந்தேதி தொடங்குகிறது.

இதையொட்டி சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ள வகுப்பறைகளில் குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்வு நடைபெறும் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியே ஆசிரியர்கள், ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் 200க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர். பின்னர் அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- நாளை மறுநாள் (5ந்தேதி) பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்களில் பணிபுரிவதற்கான நியமனத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குளறுபடி செய்துள்ளார். அதாவது 35 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால் ஒவ்வொரு பரீட்சைக்கும் ஒரு நாள் முன்பே சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தங்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில தேர்வு மையங்களுக்கு மட்டும் நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஆசிரியர்கள், ஆசிரியைககள் கடும் சிரமம் அடைவார்கள். ஆகவே தொலைதூரத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியைகளின் தேர்வு மைய பணி நியமனத்தை திரும்ப பெற்று 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து உயர் அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com