தஞ்சாவூரில் 2 பேர் பலி எதிரொலி: தமிழகம் முழுவதும் 50 சதவீத டாஸ்மாக் பார்கள் சீல் வைப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூரில் 2 பேர் பலி எதிரொலி: தமிழகம் முழுவதும் 50 சதவீத டாஸ்மாக் பார்கள் சீல் வைப்பு
Published on

சென்னை:

தஞ்சாவூர் கீழவாசலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி, குட்டி விவேக் என 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அனுமதியின்றி நடத்தப்படும் பார்களை உடனடியாக மூடி சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது.

மாநிலம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 3,200 பார்கள் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.

இந்த டெண்டர் சமீபத்தில் முடிவடைந்தது. பெரும்பாலான பார் உரிமையாளர்கள் அதிக கட்டணம் இருப்பதாக கூறி மீண்டும் டெண்டர் பணம் செலுத்த வில்லை. இதனால் பல பார்கள் அனுமதியின்றி மறைமுகமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் 214 பார்கள் சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது பார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் அப்பீல் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பார்களுக்கு டெண்டர் விடப்பட்டு திறக்கப்படும்.

மற்ற மாவட்டங்களில் டெண்டர் அதிக தொகை இருப்பதால் ஏராளமான பார் உரிமையாளர்கள் பணம் செலுத்தவில்லை.

பார் உரிமையாளர்களின் நிலையை பலமுறை அரசுக்கு விளக்கியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com