2 முறை நில அதிர்வு: வீட்டில் விரிசல்- தெருவில் திரண்ட பொதுமக்கள்

ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடின.
2 முறை நில அதிர்வு: வீட்டில் விரிசல்- தெருவில் திரண்ட பொதுமக்கள்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

சரியாக காலை 7.35 மணி மற்றும் 7.42 மணி அளவில் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர்.

குறிப்பாக வாணியம்பாடி நியூ டவுன், யாப்பா நகர், பொரபசர் நகர், ஜனதாபுரம், செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

அதேபோல் ஆம்பூர் அடுத்த மாதனூர், பாலூர் ஊராட்சி, கருப்பூர் ஊராட்சி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

ஆம்பூர் பேட்டையில் கோபி சங்கர் என்பவரது வீட்டில் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், ராஜாகுப்பம், பல்லக்குப்பம், அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம், ஆசனாம்பட்டு, சின்னப்பள்ளிகுப்பம், தென்புதூர், அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் திடீரென பெரும் சத்தம் கேட்டது.

கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் குலுங்கின. நாய்கள் சிதறி ஓடியது.கால்நடைகள் மிரண்டன.

அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புவியியல் துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நில அதிர்வு காரணமாக சில வீடுகளில் சிலாப் மீது வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தன. பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடின. இதனால் பயந்துபோய் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டோம்.

அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அச்சத்தில் உள்ளோம் என தெரிவித்தனர்.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தகவல் வரவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com