

ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மூட்டையுடன் பைக்கில் வந்த கீழ்பென்னாத்தூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது47) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
மூட்டையில் 140 காமாட்சி அம்மன் பித்தளை விளக்குகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆரணியில் பகுதியில் உள்ள பாத்திர கடைகளுக்கு காமாட்சி அம்மன் விளக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
காமாட்சி அம்மன் விளக்குகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ராஜாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காமாட்சி அம்மன் விளக்குகளை பறிமுதல் செய்தனர். ஆரணி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்செல்வியிடம் பறிமுதல் செய்யப்பட்ட விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.