

காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான மூலமாகவும் உள்ளது. காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாடு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.
இருந்தாலும், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.
அதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர் அந்த நாளை பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவில், தமிழ் நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.
இதன்மூலம், 29.07.2026 முதல் 12.087.2026 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி ஒழுங்காற்று ஆணையம் வலியுறுத்தியது.
ஆனால் கர்நாடகா அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.
இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.
எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 3500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.
எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.2026 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2056 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்.
தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.