நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.
நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Published on

காவிரி நீர் பிரச்னைகளை கண்டித்து டெல்லியில் ஆக.4ம் தேதி போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகளை, மகாராஷ்டிரா அரசு நடுவழியில் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கோரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்.,

“காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழ்நாடு உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உண்டு.

அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com