

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களால் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியிடங்கள் பல்கலைக்கழகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும். மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருப்பின், அந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.