

திருப்பத்தூர்:
திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் ஓட்டி வந்த பைக்கில் திடீரென தீப்பற்றியது.
இருசக்கர வாகனத்தில் இருந்து விஷ்ணுவர்தன் உடனடியாக இறங்கினார். கடும் வெயில் காரணமாக பைக் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.