விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

விஷ சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் திரண்டனர்.விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
Published on

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் விஷ சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எக்கியார் குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனையை தடுக்கக்கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 10 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com