வெள்ளப்பெருக்கை தமிழக அரசு திறமையாக கையாண்டது: சபாநாயகர்

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கை தமிழக அரசு திறமையாக கையாண்டது: சபாநாயகர்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவுப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசன பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 445 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டம், பாளை, நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்ட வட்டங்களில் உள்ள சுமார் 23 ஆயிரத்து 152 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

கடந்த டிசம்பர் 17-ந்தேதி வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொழுமடை குளம் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் அதிக கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இந்த கால்வாய் திறக்கப்பட்டதாலேயே அந்த ஊர் பாதுகாக்கப்பட்டதாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தெரிவித்து உள்ளனர்.

தற்போது அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் முதல் 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல விமர்சனங்கள் வந்தாலும் வெள்ளநீர் கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான் குளம் ஆகிய பகுதிகள் பயன்பெறும்.

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.

முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு வந்துள்ளது என கூறியுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம், குஜராத்தில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தை விட அங்கு முதலீடுகள் அதிகமாக உள்ளது. அந்த மாநில அரசுகள் செலுத்தும் வரியில் அவர்களுக்கு 2 ரூபாய் 19 பைசா திருப்பி அளிக்கப்படுகிறது. நமது மாநிலத்திற்கு அப்படி திருப்பி அளிக்கப்படுவதில்லை.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு இதுபோன்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுவே அங்கு அதிக முதலீடுகள் செல்ல காரணம்.

கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் மிச்சாங் புயல், தென் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com