பாம்பன் புதிய பாலத்தில் மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து- தென்னக ரெயில்வே அதிகாரிகள் மும்முரம்

பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.
பாம்பன் புதிய பாலத்தில் மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து- தென்னக ரெயில்வே அதிகாரிகள் மும்முரம்
Published on

மதுரை:

ராமேசுவரம்-மண்டபம் இடையேயான பாம்பன் ரெயில் பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை, இதுதான் ராமேசுவரம்-மண்டபம் இடையேயான தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வந்தது. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துரித ரெயில் போக்குவரத்துக்கு வசதியாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பாம்பன் கடலுக்கு நடுவே ரூ.535 கோடி செலவில் 2.05 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளில் ரெயில்வே கட்டுமான துறையின் துணை அமைப்பான ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மும்முரமாக இயங்கி வருகிறது. அங்கு இதுவரை 84 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 99 இணைப்பு கர்டர்கள் அமைக்க வேண்டும். பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இதுவரை 76 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கர்டர் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு கர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் கப்பல் செல்வதற்காக, இருபுறமும் உயரும் கிரேன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது‌. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com