அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்: செந்தில் பாலாஜி மனு மீது 28-ந்தேதி தீர்ப்பு

அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்: செந்தில் பாலாஜி மனு மீது 28-ந்தேதி தீர்ப்பு
Published on

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கிடைக்காத நிலையில் புழல் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவின் வழக்கில் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்?. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வருகிற 28-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை கடந்த மாதம் 16-ம்தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டுப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com