குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?... சீமான் கேள்வி

குஜராத்தில் பாஜக 8 முறை அல்ல, 80வது ஜெயித்தாலும் அது கேவலம். ஆளுநர் என்பவர் ஆறாவது விரலை போன்றவர்.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசி வருகிறது. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவர்களது கண்ணுக்கு தெரிகிறார். வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க. நாட்டின் பெருமை காந்தியா, அம்பேத்கரா, வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி மலேசியா, சிங்கபூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது.

என்.எல்.சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து மிக விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர். அப்போது அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள். கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள். கரும்பு வெட்டுகிறார்கள்.

எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமையாவோம். இலங்கையில் நடந்துதான் இங்கும் நடக்கும். அதற்குள் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்படுவார்கள். குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார். இது குறித்த காணொலி உள்ளது. இதை வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா, இப்படி வெற்றி பெறுவதற்கு பதில் விஷம் குடித்து சாகலாம். அவர்கள் (பாஜக) 8 முறை அல்ல 80 வது முறை ஜெயித்தாலும் அது கேவலம்.

கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாது. அப்போது ஆளுநர் சட்டசபையில் மட்டும் பேசி விட்டு போவார். தற்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com