

சேலம்:
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தேசிய தேர்வு முகமை கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதி மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு உதவி தொகை பெறுவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஜூன் -2021 அறிவிப்பு 2 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, பிப்ரவரி மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கம்ப்யூட்டர் வழியாக இந்த தேர்வை நடத்தியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் நெட் தேர்வை எழுதினர்.
தற்போது எர்த், வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல், இயற்பியல் அறிவியல், கணித அறிவியல், வேதியியல் அறிவியல், வாழ்க்கை அறிவியல் (குரூப் 1), வாழ்க்கை அறிவியல் (குரூப் 2) ஆகியவற்றுக்கான தற்காலிக விடை குறிப்புகள் சி.எஸ்.ஐ.ஆர். நெட் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டில் உள்ள விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தாங்கள் எழுதிய விடைத்தாள், சி.எஸ்.ஐ.ஆர். நெட் வழங்கிய விடைகுறிப்புகள் ஆகியவற்றை பார்க்கலாம்.