

ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த மாதம் கனமழையின் காரணமாக மலைப் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் தற்காலிமாக சாலையை சீரமைத்து நெடுஞ்சாலைத்துறையினர் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில் மீண்டும் நிரந்தர தீர்வு காணவேண்டி மலைப்பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதாலும் பாதுகாப்பற்ற முறையில் கனரக வாகனங்கள் செல்வதால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சீரமைக்கும் பணிகளை பாதுகாப்புடன் விரைந்து முடிக்கும் நோக்கில் இன்று முதல் 3 நாட்கள் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் கார்மேகம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அனைத்து வாகனங்களும் சேலம் ஏற்காடு வழிக்கு பதிலாக மாற்று வழியான குப்பனூர் சாலையில் அனுமதிக்கப்பட உள்ளது.