

சேலம்:
சேலம் மாநகராட்சியில் 14-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் மண்டல தலைவர் நடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரது வேட்புமனு இன்று காலை அஸ்தம்பட்டி மண்டல தேர்தல் அலுவலகத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை என புகார் கூறப்பட்டது.
இதை அறிந்த நடேசன், தேர்தல் உதவி அலுவலரிடம் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவை எனது பெயரில் இல்லை. எனது மனைவி பெயரில்தான் உள்ளது.
எனவே எனது வேட்பு மனுவை ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது வேட்பு மனுவை தேர்தல் உதவி அலுவலர் நிறுத்தி வைத்துள்ளார். விசாரணை முடிந்த பிறகு மனு குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தேர்தல் உதவி அலுவலர் தெரிவித்தார்.