சாலையை சீரமைக்க கோரி பள்ளி குழந்தைகளுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலையை சீரமைக்க கோரி பள்ளி குழந்தைகளுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர் ஊராட்சியில் வீராச்சியூர், பூமருத்துவர், கண்ணப்பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் இன்று காலை கணவாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியில் இருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில் சாலை முழுவதும் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com