

திருப்பூர்:
திருப்பூர் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 635 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 52) என்பதும், அவர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யவும், மாட்டு தீவனத்துக்கு கொடுக்கவும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து 635 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.