ரூ.6 ஆயிரம் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்

500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரூ.6 ஆயிரம் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல்
Published on

சோழிங்கநல்லூர்:

மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com