வைகை அணை நீரில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டம்: தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவிப்பு

மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகை அணை நீரில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டம்: தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவிப்பு
Published on

தேனி:

தேனி மாவட்டம், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மீன்பிடி ஏலம் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி ஏலதாரர்கள் மீன்களின் எடை பெருக்கத்திற்காக அணை நீரில் கழிவுகளை கொட்டி வருவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட சக்கரைபட்டி கிராம பகுதியில் உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி நகர பொதுச்செயலாளர் பொன்மணி தலைமையில், மீனவர் பழனியாண்டி மற்றும் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் வைகை அணையில் மீன் பிடி ஏலத்தை ரத்து செய்ய கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி, நீரில் நின்று கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் மீன் பிடி நிலத்தை ரத்து செய்யாவிட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் தாலுகா, தென்கரை வருவாய் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, வைகை அணை நீரில் இறங்கி போராட்டம் நடத்தி வருபவரிடம் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தற்போது தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவம் வைகை அணை நீர்பிடிப்பை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com