என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பஸ்.
திருப்பூர் அருகே தனியார் ஆம்னி பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 36 பயணிகள்
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பூர்:
கும்பகோணத்தில் இருந்து கோவைக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 36 பயணிகள் இருந்தனர். பஸ்சை ராபர்ட் என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மின் பகிர்மான அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 36 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. டிரைவர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தால் பொங்கலூர் சுற்று வட்டார பகுதி முழுவதும் சுமார் 3 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






