சாராய ஊறல் தயாரித்ததாக புகார்- சேலம் மத்திய சிறையில் கைதி உண்ணாவிரதம்

கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதி மாங்கா பிரபு
கைதி மாங்கா பிரபு
Published on

சேலம்:

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.

மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.

மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com