என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விசைத்தறிகள் வேலை நிறுத்தம்- ரூ.300 கோடி மதிப்புள்ள நூல்கள் தேக்கம்
- கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது.
பல்லடம்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நலி வடைந்துள்ளது. கடந்த 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைத்தறிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மறு சுழற்சி நூல் மில்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில் என்கின்ற மறுசுழற்சி நூற்பாலைகளும், 5.5 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தியாகின்றது.
இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை விசைத்தறியாளர்கள்-ஜவுளி உற்பத்தியாளர்கள் பிரச்சனை என்று பாராமல், ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






