அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம்: தேசிய தலைவர்கள் வருகையால் தேர்தல் களம் களை கட்டியது

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம்: தேசிய தலைவர்கள் வருகையால் தேர்தல் களம் களை கட்டியது
Published on

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.

பிரசாரத்துக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் மீதான குறைகளை சுட்டிக்காட்டிபிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இப்படி தேர்தல் பிரசாரம் 'களை' கட்டி உள்ள நிலையில் பிரதமர் மோடி சென்னையில் நேற்று ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்துக்கு 7-வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள பிரதமர்மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தியும் காங்கிரசிற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இப்படி தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் சோதனைகளும் தீவிரமாகி உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகளும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com