சென்னை, கோவையில் உச்சம் தொட்டது: நெற்களஞ்சியமான டெல்டாவில் அரிசி விலை கடும் உயர்வு

சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.
சென்னை, கோவையில் உச்சம் தொட்டது: நெற்களஞ்சியமான டெல்டாவில் அரிசி விலை கடும் உயர்வு
Published on

திருச்சி:

காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com