நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம்

கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது.27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம்
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'சிவகங்கை' என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு (6ம்தேதி) வந்தது.

இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15-ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பருவகால சூழ்நிலை காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 8 மணி அளவில் சிவகங்கை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது. நண்பகல் 12 மணி அளவில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றது. மீண்டும் 4 மணிக்கு நாகைக்கு வரும்.

கடந்தாண்டு தொடங்கிய கப்பல் சேவை, நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இரு நாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 'சிவகங்கை' கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ 7,500 கட்டணமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. sailindsri.com என்ற இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com