பறக்கும் படையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை

ஈரோடு இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பறக்கும் படையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படையினர் மற்றும் 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணம் பட்டுவாடா நடப்பதாக வந்த புகார் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் துணை ராணுவத்தினர், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடு வருகை தந்தனர். நேற்று முன்தினம் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் ஈரோடு வந்தனர். மேலும் இரண்டு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஈரோடு வந்தனர். மொத்தம் 5 கம்பெனி வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். துணை ராணுவத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் வாகன சோதனையிலும் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் துணை ராணுவத்தினர் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஒரு குழுவில் 8 துணை ராணுவத்தினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 4 பேர் , காவல்துறையினர் 3 பேர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓட்டுனர் என 17 நபர்கள் செயல்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு ரெயில் நிலையம், காளை மாட்டு சிலை, கொல்லம்பாளையம், செங்கோடம்பள்ளம் அக்ரஹாரம் , சூரம்பட்டி நால்ரோடு, குமலன்குட்டை, வில்லரசம்பட்டி, வீரப்பம்பாளையம் பிரிவு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பேரேஜ், மரப்பாலம் ஆகிய 15 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். அதில் பயணம் செய்யும் நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் முகவரி, செல்போன் எண் விவரம் போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com