என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் நமது அரசியல் சாசனம் தான் ஆதாரமாக உள்ளது- பிரதமர் மோடி
- 75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு.
- காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு பயணம் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறோம்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது.
அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு. இந்திய சாசனத்தை வடிவமைத்தவர்களுக்கு நன்றி.
அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றி உள்ளனர். வெவ்வேறு பின்னணி கொண்ட 15 பெண்கள் அரசியல் நிர்ணய சபையில் இருந்தனர்.
ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டாட வேண்டிய நேரம் இது.
காலங்களை கடந்து, இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் விடுதலைக்கு பின் பெண்களுக்கு வாக்குரிமை தர பல ஆண்டுகளை எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
இன்று மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்.
இன்று நாட்டின் குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
நமது நாடு விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக உருவெடுக்கும். இது 140 கோடி இந்திய மக்களின் சங்கல்பம்.
நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில் நமது அரசியல் சாசனம் தான் ஆதாரமாக உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






