என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10 நிமிடம் நிற்கும் நிலையங்களில் ரெயில் கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவு
- கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம்.
- படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சென்னை:
நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரெயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன.
இந்த நிலையில் 10 நிமிடம் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில் ரெயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய நிலையங்கள் தவிர, கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இது குறித்து ரெயில்வே தலைமை எந்திரவியல் பொறியாளரே முடிவு எடுக்க வேண்டும். அதுபோல ஒவ்வொரு ரெயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரெயில் நிலைய இடங்களில் விவரங்களை தொகுத்து 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நிலையங்களில் ரெயில்கள் நிற்கும்போது, ரெயில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில், 'சுத்தமான ரெயில் நிலையம்' திட்டத்தை இந்திய ரெயில்வே கடந்த 2003-ல் அறிமுகம் செய்தது. படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிப்பறையை முழுமையாக சுத்தம் செய்வது கிருமி நாசினி தெளிப்பது, குப்பையை அகற்றுவது உள்பட எந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு செயல்முறைகள் இதில் அடங்கும்.






