பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் விடுதலை

கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் விடுதலை
Published on

திண்டுக்கல்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓ.ராஜா உள்பட 6 பேரும் காலையிலேயே கோர்ட்டில் ஆஜராகினர். பழங்குடியின மற்றும் பட்டியலின சிறப்பு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் மனுதாரராக இருந்த நிலையில் அரசு தரப்பு வக்கீலாக பாப்பு மோகன் வாதாடினார். தீர்ப்புக்கு பின்பு அவர் தெரிவிக்கையில்,

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து நாகமுத்துவின் இறப்பிற்கு நீதி கிடைக்க போராடுவோம் என்றார்.

தீர்ப்பு குறித்து ஓ.ராஜா தெரிவிக்கையில்,

இந்த வழக்கில் என்மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றம் மூலம் நான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தாலும் நான் குற்றம் செய்யவில்லை என நிரூபிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com