என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு திறப்பு - பொள்ளாச்சி கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் கவியருவி உள்ளது.
இந்த கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் உற்சாக குளியல் போட்டு விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்வார்கள்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்தது.
குறிப்பாக கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளப்பெருக்கை அடுத்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.
தற்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளது. கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர். நேற்று மதியம் 1 மணி முதல் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வனத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதுடன், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
கடந்த மே மாதம் இறுதியில் மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடைவிதித்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 23-ந் தேதி பெய்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.






