என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி ரோஜா கண்காட்சி தொடங்கியது: 20 ஆயிரம் பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்ட டால்பின்கள் உருவம்
- ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
- கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
ஊட்டியின் மைய பகுதியில் அமைந்துள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை முன்னிட்டு ரோஜா பூங்கா முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் தோரணங்கள் கட்டப்பட்டு, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் வடிவமைக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக 20 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு டால்பின்கள் அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்பட பல்வேறு வடிவங்களும் உருவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களையும் செய்து வைத்திருந்தனர். ரோஜா இதழ்களை கொண்டு ரங்கோலியும் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த டால்பின்கள், சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்ளிட்ட வடிவமைப்புகளை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். அத்துடன் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். மேலும் ரோஜா இதழ்களை கொண்டு வரையப்பட்டிருந்த ரங்கோலியையும் பார்த்து ரசித்தனர்.
பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.






