பழவேற்காடு கடலில் எண்ணெய் கழிவு: நிவாரண உதவி கேட்டு 33 மீனவ கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்
பழவேற்காடு கடலில் எண்ணெய் கழிவு: நிவாரண உதவி கேட்டு 33 மீனவ கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
Published on

பொன்னேரி:

மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com