இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெறலாம்... புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது

தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.
இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு பெறலாம்... புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது
Published on

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. எனவே கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை கடைபிடித்து வந்தனர். ஆனால் அதேவேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன.

எனவே தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

ஏனென்றால் கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்ததால் விதிகளை மீறுவதற்கு அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அதிலும் விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com