நெல்லை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்

சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நெல்லை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்
Published on

நெல்லை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com