விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை
Published on

விழுப்புரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி.

இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் பட்டில் கேட்டன் பலிராம், ஏக்தாபக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விக்கிரவாண்டி வந்தனர்.

அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இன்று காலை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் சென்றனர். அங்கு ஆசிரமத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com