

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு அவரை கடித்தது.
உடனே அவர் சுதாரித்துக்கொண்டு அந்த பாம்பை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தவாறு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது ஏற்கெனவே நிறைய உள், வெளி நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்தனர். டப்பாவில் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து பதறி ஓடினர்.
பின்பு பாம்புடன் வந்த ராஜாவை டாக்டர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பாம்புடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.