என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழமொழிப் புலவரான நயினார் பாஜக தேசியத் தலைவராகவே ஆகலாம் - தங்கம் தென்னரசு கிண்டல்
- மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
- மாநில சுயாட்சி தீர்மானத்தை பாஜக ஏற்காது என கூறி அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
மேலும் அவர் மலையாளத்தில் எப்படி பேசினார் என நயினார் நாகேந்திரன் அமொழியில் பேசிக்காட்டினார். தனது உரையின்போது பல்வேறு மொழிகளில் நயினார் நாகேந்திரன் பேசிக்காட்டினார்.
அப்போது எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் மாறியிருக்கக்கூடிய நிலையில் அவர் பல மொழி பேசுவதை பார்த்தால் பழமொழிப் புலவர் போல இருக்கிறார். எனவே அவர் தேசிய தலைவர் ஆவதற்கு பலமான அச்சாரம் போடுகிறாரோ என்னவோ என்று கேலியாக தெரிவித்தார்.
இதை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநில சுயாட்சி தீர்மானத்தை பாஜக ஏற்காது என கூறி அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.






