717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா, புரளியா?- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.
Nainar Nagendran
Published on

“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், RTI சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அல்லது எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

"மூடப்பட்ட” டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?

"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்" என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.

“மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதிலில்லை. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு.

மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும்,"அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்" என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது.

அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?

உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com