குரங்கம்மை நோயின் அறிகுறிகள் என்ன?

தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.
குரங்கம்மை நோயின் அறிகுறிகள் என்ன?
Published on

சென்னை:

ஆப்பிரிக்கா நாடுகளை ஆட்டம் காண செய்த குரங்கம்மை, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் 116 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி இருக்கிறது. இந்தியாவில் இந்த நோய் பரவி விடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது உத்தரவின்பேரில், பொது சுகாதாரத்துறை குரங்கம்மை தடுப்பு பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.

குரங்கம்மை அறிகுறி, தடுப்பு பணிகள் மற்றும் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

1958-ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.

குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஆம்புலன்ஸ் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து அழைத்து செல்லப்படுவார்கள். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனத்தில் அவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிகளில் தலா 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 116 நாடுகளுக்கு யார் எல்லாம் சென்றுள்ளார்கள் என்பதை அறிய, 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது. உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com