சைதை துரைசாமியின் மகனை 5-வது நாளாக மலைவாழ் மக்கள் உதவியுடன் தேடுகிறார்கள்

நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.
சைதை துரைசாமியின் மகனை 5-வது நாளாக மலைவாழ் மக்கள் உதவியுடன் தேடுகிறார்கள்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத் (35) என்பவருடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

அவர்கள், சென்னை திரும்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சிம்லா விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்தபோது பாறை ஒன்று உருண்டு வந்து மோதியது. இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளதாக்கு பகுதியில் விழுந்ததோடு, அருகில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் டிரைவர் தஞ்ஜின் காருக்குள் 'சீட் பெல்ட்' அணிந்தபடி இறந்து கிடந்தார். படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கோபிநாத் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய, திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருடன், உள்ளூர் மக்களும் இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. வெற்றி பயன்படுத்திய செல்போன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போன் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பாறை இடுக்குகளில் தேடுதல் பணி இன்று துரிதப்படுத்தப்பட்டது.

நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், டிரோன் உதவியுடனும் தேடுதல் பணி நடக்கிறது. விபத்து நடந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் தேடுதல் பணியில் அடிக்கடி தொய்வு ஏற்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) தேடுதல் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்த அவர்கள் அந்த நதி அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட இருக்கின்றனர். ஆனால் அந்த பணி மிகமிக சவாலாக இருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். மீட்புக் குழுவினருடன் சேர்ந்து அவர்களும் வெற்றியை தேடி வருகிறார்கள்.

அவர்கள் அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களிடம் பேசி உதவி கேட்டுள்ளனர். மலைவாழ் மக்கள் உதவியுடனும் இன்று தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com