கோவையில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
கோவையில் இன்று மாற்றுத்திறனாளி வீரர்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அருகில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் ஆகியோர் உள்ளனர்.
கோவையில் இன்று மாற்றுத்திறனாளி வீரர்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அருகில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் ஆகியோர் உள்ளனர்.
Published on

கோவை:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி பதவியேற்று கொண்டார்.

இதையடுத்து அவரின் முதல் அரசு நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் காரில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சென்று தங்கினார்.

இன்று காலை கோவை நேரு விளையாட்டு மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்றார். அங்கு அவரை விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டார். விளையாட்டு விடுதி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

நேரு விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கோவை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் விளையாட்டு வீரர்கள், அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

ஆய்வு கூட்டம் முடிந்ததும், உதயநிதி ஸ்டாலின் கொடிசியா மைதானத்திற்கு சென்றார். அங்கு மிக பிரமாண்டமான அளவில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

விழாவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முன்னதாக கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com