

தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி அமைச்சர் என்.ஆனந்த் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அமைச்சர் ஆனந்த் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகரில் திடீரென ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
ஆய்வின்போது அமைச்சர் என்.ஆனந்த் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கழிப்பிட வசதி மற்றும் வீட்டு வசதி என அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கைகள் வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் என்.ஆனந்த் முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உடனடியாக மொபைல் கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து நிரந்தரமாக கழிப்பிட வசதி மற்றும் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என பொதுமக்களிடம் கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய் எப்போதும் ஏழை மக்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவர்.
உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார் எனக்கு கூறினார்.
இதைக்கேட்ட பொது மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து திடீர் நகரில் உள்ள கூவம் ஆற்றில் அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆற்றின் கரையோர பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தபோது கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து இருப்பதை கண்டார்.
இதனால் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுவதை அறிந்த அமைச்சர் என். ஆனந்த் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி கூவம் ஆற்றை தூர் வாரவும் உத்தரவிட்டார்.
தூர்வாரும் பணிகளை வருகிற மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
ஆய்வின் போது சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தன.