எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்கள்- அ.தி.மு.க.வினர் மறியலால் பரபரப்பு

பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்கள்- அ.தி.மு.க.வினர் மறியலால் பரபரப்பு
Published on

திருப்போரூர்:

அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் பூட்டு போடவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் திருப்போரூர் பஸ்நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் மீது காவித் துண்டை அணிவித்து சென்றுவிட்டனர். இன்று காலை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)மங்கள பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர்.சிலை இருந்த இரும்பு கூண்டுக்கு புதிய பூட்டும் போடப்பட்டது.

இதுதொடர்பாக திருப்போரூர் போலீஸ்நிலை யத்தில் அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருப்போரூர் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com